சாலையோரம் பிளாஸ்டிக் கழிவுகள்; அகற்றிய என்.எஸ்.எஸ்., மாணவர்கள்
கூடலுார்; கல்லட்டி, மற்றும் மசினகுடி சாலையில் சுற்றுலா பயணிகள் வீசி சென்ற,'பிளாஸ்டிக்' கழிவுகளை என்.எஸ்.எஸ்., அகற்றினர்.முதுமலை மசினகுடி கோட்டம், சிங்கார வனச்சரக வன ஊழியர்கள், ஊட்டி ஜே.எஸ்.எஸ்., பார்மசி கல்லுாரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் இணைந்து, மசினகுடியில் சாலையோரங்களில் சுற்றுலா பயணிகள் வீசி சென்ற குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஊட்டி கல்லட்டி சாலையில், துவங்கிய பணிகளை சிங்கார வனச்சரகர் தனபால் துவக்கி வைத்தார்.கல்லட்டி முதல் மாவனல்லா வரையும், மசினகுடி முதல் மாயாறு சாலை ஓரங்களில் சுற்றுலா பயணிகள் வீசி சென்ற, குப்பைகள், பிளாஸ்டி கழிவுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரித்து அகற்றினர். சேகரிக்கப்பட்ட கழிவுகள் மசினகுடி ஊராட்சி திடக்கழிவு மேலாண்மை குப்பை கிடங்கில் ஒப்படைத்தனர்.இப்பணியின் போது, வாகனங்களில் பயணித்த கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநில சுற்றுலா பயணிகளுக்கு பிளாஸ்டிக் தடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பணியில், வனவர்கள் சங்கர், மோகன்ராஜ், கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பாபு, வன ஊழியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.