அலுவலகத்தை சுற்றி புதர்கள் கரடி நடமாட்டத்தால் மக்கள் பீதி
மஞ்சூர் : குந்தா தாலுகா அலுவலகத்தை சுற்றி வளர்ந்துள்ள முட்புதர்களால் வனவிலங்கு நடமாட்டம் அதிகரித்து உள்ளது.மஞ்சூர் - கீழ்குந்தா சாலையில் கொட்டரக்கண்டியில் குந்தா தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் உள்ள, 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறு தேவைகளுக்கு தாலுகா அலுவலகம் வருகின்றனர். அலுவலகம் எதிரே அடர்ந்த சோலை பகுதி உள்ளது. இங்கு கரடி, காட்டுப்பன்றி நடமாட்டம் உள்ளது.இந்நிலையில், தாலுகா அலுவலகத்தை சுற்றி புதர் செடிகள் ஓங்கி வளர்ந்துள்ளன. சிலர் குப்பை கழிவுகளையும் புதர்களில் கொட்டுவதால் கூட்டம், கூட்டமாக காட்டு பன்றிகள் வருகிறது. சில நேரங்களில் கரடிகளும் வருகின்றன.மக்கள் கூறுகையில்,'இந்த பகுதியில் பஸ் ஸ்டாண்ட் உள்ளதால் மக்களின் பாதுகாப்பு குருதி, குந்தா தாலுகா நிர்வாகம் அலுவலகத்தை சுற்றியுள்ள முட்புதர்களை அகற்றி, சுத்தம் செய்ய வேண்டும்,' என்றனர்.