முதுமலை தொரப்பள்ளி -தெப்பக்காடு இடையே மின் சப்ளை பாதிப்பு! பழங்குடி மக்கள், வனத்துறை ஊழியர்கள் அவதி
கூடலுார்; முதுமலை தொரப்பள்ளி -தெப்பக்காடு இடையே, முதல்வர் துவக்கி வைத்த கேபிள் வயர் (வான் வழி தொகுப்பு கம்பி) சேதமடைந்து, மின் சப்ளை பாதிக்கப்பட்டதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். முதுமலை புலிகள் காப்பத்தில் உள்ள வனத்துறை அலுவலகங்கள், குடியிருப்புகள், பழங்குடியினர் வீடுகளுக்கு தொரப்பள்ளி, தெப்பக்காடு இடையே வனப்பகுதி வழியாக, மின் கம்பியின் மூலம், மின் சப்ளை வழங்கி வந்தனர். மழை காலங்களில் மின் கம்பி மீது மரங்கள், மரக்கிளைகள் விழுந்து, அடிக்கடி மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. இதனால், வனவிலங்குகளும் பாதிக்கும் ஆபத்து ஏற்பட்டது. மேலும், இரவு நேரங்களில், இவ்வாறு மின் சப்ளை துண்டிக்கப்பட்டால், வனவிலங்கு அச்சம் காரணமாக உடனடியாக சீரமைக்க முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். வான் வழி தொகுப்பு கம்பி இதற்கு தீர்வாக, தொரப்பள்ளி -தெப்பக்காடு இடையே, 11 கி.மீ., துாரத்துக்கு, 5 கோடி ரூபாய் மதிப்பில் கேபிள் வயர் (வான் வழி தொகுப்பு கம்பி) அமைக்கப்பட்டது. 'இத்திட்டத்தை மே,13ம் தேதி மாநில முதல்வர் துவக்கி வைத்தார். திட்ட மூலம், அப்பகுதிக்கு தடையின்றி மின் சப்ளை சப்ளை வழங்கப்படுவதுடன், வனவிலங்குகளுக்கு ஆபத்து ஏற்படுவது தவிர்க்கப்படும்,' என, அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், மரம் விழுந்து, கேபிள் வயர் சேதமடைந்ததாக கூறி, மின் சப்ளை நிறுத்தப்பட்டு, கம்பி மூலம் மின் சப்ளை வழங்கினர். சேதமடைந்த கேபிள் வயர் இரண்டு மாதமாக சீரமைக்கப்படாததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மக்கள் கூறுகையில், 'முதுமலை குடியிருப்பு பகுதிகளுக்கு, தடையின்றி மின்சப்ளை வழங்க, கேபிள் வயர் அமைத்து, மின் சப்ளை துவக்கப்பட்டது. ஒரு சில வாரத்தில், கேபிள் வயர் சேதமடைந்ததாகக் கூறி அதன் வழியாக மின்சப்ளை நிறுத்தப்பட்டது. இரண்டு மாதமாக சீரமைக்கவில்லை,' என்றனர். அதிகாரிகள் கூறுகளில், 'பெரியளவிலான மரம் விழுந்து, கேபிள் வயர் சேதமடைந்ததால் மின் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், கம்பி வழியாக, மின் சப்ளை வழங்கி வருகிறோம். இரு நாட்களில் கேபிள் வயர் சீரமைத்து அதன் வழியாக மின் சப்ளை வழங்கப்படும்,' என்றனர்.
தடையில்லா மின்சாரம் வேண்டும்
முதுமலை தெப்பக்காடு பகுதியை சேர்ந்த பழங்குடி பொம்மன் கூறுகையில், ''முதுமலை புலிகள் காப்பகம், கார்குடி, தெப்பக்காடு பகுதிகளில், வனச்சரக அலுவலகம், வன ஊழியர்கள் குடியிருப்புகள், தங்கும் விடுதிகள், அரசு பள்ளி, வளர்ப்பு யானைகள் முகாம் மற்றும் கார்குடி, லைட்பாடி, யானைபாடி, தெக்குப்பாடி ஆகிய பழங்குடி கிராமங்கள் உள்ளன. இப்பகுதிக்கு தொரப்பள்ளியில் இருந்து வனப்பகுதி வழியாக, மின் கம்பி வாயிலாக மின் சப்ளை வழங்கி வந்தனர். வனப்பகுதி மரங்கள், மரக்கிளைகள் விழுந்து அடிக்கடி மின் சப்ளை பாதிக்கப்பட்டது. இதற்கு தீர்வாக, தொரப்பள்ளி - தெப்பக்காடு இடையே தடையின்றி மின் சப்ளை வழங்க, மின் கேபிள் அமைத்துள்ளனர். அதனை, தமிழக முதல்வர் துவக்கி வைத்துள்ளார். தற்போது, இதன் மூலம் மின் சப்ளை செய்வதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், இரவில் மாணவர்கள் படிப்பதற்கும், குடிநீர் மோட்டார் இயக்கவும் சிரமப்படுகின்றனர். எனவே, மின் கேபிளை சீரமைத்து, தடையின்றி மின் சப்ளை வழங்க வேண்டும்,'' என்றார்.