ஆட்டோக்களில் கியூ.ஆர்., கோடு உரிமையாளர், ஓட்டுனர் விவரம்
கூடலுார், : கூடலுார் ஆட்டோக்களில் உரிமையாளர், ஓட்டுனர் விபரங்கள் குறித்த 'கியூ.ஆர்.,கோடு' வைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.கூடலுாரில், 1,000க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனை முறைப்படுத்தும் வகையில், ஆட்டோக்களில், அதன் உரிமையாளர் மற்றும் ஓட்டுனர்கள் குறித்த விபரங்களை, பயணிகள் எளிதாக தெரிந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, போலீஸ் துறை சார்பில் 'கியூ.ஆர்.,கோடு' வைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் கூடலுாரில் நடந்தது. எஸ்.ஐ., குகனேஸ்வரன் வரவேற்றார். இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீது, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பிரபாகர், போக்குவரத்து துறை ஆய்வாளர் குமார் முன்னிலை வைத்தனர்.டி.எஸ்.பி., வசந்தகுமார் தலைமை வகித்து, 'பாதுகாப்பாக ஆட்டோக்களை இயக்குவது; பயணிகள் பாதுகாப்பு; ஆட்டோ உரிமையாளர் மற்றும் ஓட்டுனர் விவரங்களை பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில், ஆட்டோக்களில் 'கியூ.ஆர்.,கோடு' வைப்பதன் அவசியம்,' குறித்து விளக்கினார்.போலீசார் கூறுகையில், 'கூடலுாரில், போலீசார் கணக்கின்படி, 21 ஆட்டோ ஸ்டாண்டுகள்; 802 ஆட்டோகள் உள்ளன. ஆனால், இதைவிட அதிகமான ஆட்டோக்கள் இயக்கப்படுகிறது. இதனை வரைமுறைப்படுத்தவும், ஆட்டோக்களில் பயணிக்கும், பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு,'கியூ.ஆர்., கோடு' முறை கொண்டு வரப்படும். மற்ற பகுதியில் உள்ள ஆட்டோக்கள் இங்கு இயங்க அனுமதியில்லை,' என்றனர்.