பஸ் ஸ்டாண்டில் தேங்கும் மழைநீர்: பயணிகள் அதிருப்தி
கூடலுார்; கூடலுார் பஸ் ஸ்டாண்டில் மழையின் போது தண்ணீர் தேங்குவதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கூடலுார் மைசூரு தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள, பழைய பஸ் ஸ்டாண்ட் இடிக்கப்பட்டு, புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்பட்டது. பஸ் ஸ்டாண்டின் முன் வளாகம் முழுமையாக சீரமைக்கப்படாத நிலையில், கடந்த ஆண்டு பிப்., மாதம் புதிய பஸ் ஸ்டாண்ட் திறந்து, செயல்பட்டு வருகிறது.சீரமைக்கப்படாத, பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் பருவமழை காலத்தில் மழை நீர் குளம் போல தேங்கியதால், பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். அப்பகுதியை சீரமைக்க மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுவரை அதற்கான நடவடிக்கை இல்லை.கோடை வெப்பத்தின் போது, வீசும் காற்றில் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் ஏற்படும் துாசியில் மக்கள் நடந்து செல்ல முடியாமல், கடும் சிரமப்பட்டு வருகின்றனர். சுவாசம் தொடர்பான நோய்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்நிலையில், அவ்வப்போது பெய்து வரும் மழையின் போது, பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், மழைநீர் குளம் போல தேங்கி நிற்பதால், பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை சீரமைக்க நடவடிக்கை இல்லாததால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.பயணிகள் கூறுகையில், 'பஸ் ஸ்டாண்ட் பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது, பருவமழையின் போது பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் தேங்கும் மழை நீர் பயணிகள் கடும் சிரமங்களை சந்தித்து வந்தனர். இதனை தவிர்க்க, நடப்பாண்டு பருவமழை துவங்கும் முன், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.