சாலையில் செல்லும் ஊர்வன உயிரினங்கள்; வாகன இயக்கத்தில் கவனம் தேவை
பந்தலுார்; 'பந்தலுார் பகுதி சாலைகளில், ஊர்வன வகை வனவிலங்குகள், அதிக அளவில் உலா வருவதால் வாகன ஓட்டுனர்கள் கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும்,' என, வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். பந்தலுார் பகுதி சாலைகள் எஸ்டேட் மற்றும் வனப்பகுதிகளுக்கு மத்தியில் அமைந்துள்ளன. இதனால், யானை, சிறுத்தை, முள்ளம்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் மற்றும் பாம்பு, பச்சோந்தி போன்ற ஊர்வன வகை விலங்குகளும் அதிக அளவில், சாலையை கடந்து செல்வது வழக்கம். அதில், ஊர்வன வகை விலங்குகள் அதிக அளவில், சாலைகளில் வேகமாக வரும் வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்பதும் அதிகரித்து வருகிறது. சமீப காலமாக, பந்தலுாரில் இருந்து சேரம்பாடி செல்லும் சாலையில், அதிக அளவில் பச்சோந்திகளை காண முடிகிறது. வாகனங்கள் வரும்போது எந்த பகுதியில் செல்வது என்று தெரியாமல் பச்சோந்திகள் சாலை நடுவில் நின்று விடுகின்றன. வேகமாக வரும் வாகனங்கள் இதுபோன்ற ஊர்வன வகை விலங்குகள் மீது மோதி பரிதாபமாக உயிரிழந்து வருகிறது. வனத்துறையினர் கூறுகையில், ' பந்தலுார் சேரம்பாடி சாலைகளில், ஊர்வன வகை உயிரனங்கள், வன விலங்குகள், அதிக அளவில் உலா வருவதால் வாகன ஓட்டுனர்கள் கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும். சிறிய உரியினங்கள் சாலையை கடந்து செல்லும் வரை வாகனங்களை நிறுத்த வேண்டும்,' என்றனர்.