| ADDED : டிச 29, 2024 11:27 PM
கூடலுார்; கூடலுார், பாடந்துறை அருகே கொட்டகையில் கட்டி வைத்திருந்த ஆறு ஆடுகளை சிறுத்தை தாக்கி கொன்ற சம்பவத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.கூடலுார் பாடந்துறை கருக்கபாளி பகுதியை சேர்ந்தவர் ராம் உண்ணி. இவர், தான் வளர்க்கும் ஆறு ஆடுகளை நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கொட்டகையில் கட்டி வைத்திருந்தார். நேற்று, அதிகாலை ஆடுகள் சப்தம் கேட்டுள்ளது. வெளியே வந்து பார்த்தப் போது, ஆட்டு கொட்டாய் உடைக்கப்பட்டு, ஐந்து ஆடுகள் இறந்து கிடந்தன. ஒரு ஆடு காணவில்லை. அதனை சிறுத்தை துாக்கி சென்றுள்ளது.தகவலின் பேரில், வனச்சகர் ராதாகிருஷ்ணன் வன ஊழியர்கள், அப்பகுதியில் ஆய்வு செய்து, சிறுத்தை தாக்கி ஆடுகள் உயிரிழந்ததை உறுதி செய்தனர். 'இறந்த ஆடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்,' என, வனத்துறையினர் தெரிவித்தனர்.மக்கள் கூறுகையில், 'ஆட்டு கொட்டகை உடைத்து ஆடுகளை கொன்ற சிறுத்தை, தொடர்ந்து ஆடுகளை மட்டுமல்லாமல், இப்பகுதி மனிதர்களையும் தாக்கும் ஆபத்துள்ளது. எனவே, வனத்துறை கூண்டு வைத்து சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடவும், இறந்த ஆடுகளுக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.