உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சுகாதார மையத்தை புதிய கட்டடத்திற்கு மாற்றணும் கூடலுார் மக்கள் எதிர்பார்ப்பு

சுகாதார மையத்தை புதிய கட்டடத்திற்கு மாற்றணும் கூடலுார் மக்கள் எதிர்பார்ப்பு

கூடலூர்: கூடலூர், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, உழவர் சந்தையை ஒட்டி நகர அரசு சுகாதார மையம், சிறிய கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. அங்கு, போதிய இடவசதி இல்லாததால் ஊழியர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். நோயாளிகள், கட்டடத்தின் வெளியே, நகராட்சி ஊழியர்கள் குடியிருப்புக்கு செல்லும் சாலையில் திறந்த வெளியில் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் மைசூரு தேசிய நெடுஞ்சாலை புதிய கோர்ட் அருகே, 1.20 கோடி ரூபாய் செலவில் புதிய நகர சுகாதார மையத்துக்கும் புதிய கட்டடம் கட்டியுள்ளனர். பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்ற நிலையில், கட்டடம் திறந்து செயல்பாட்டுக்கு வராததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஊழியர்கள், நோயாளிகள் சிரமத்தை தவிர்க்க நகர சுகாதார மையத்தை, புதிய கட்டடத்திற்கு மாற்ற வலியுறுத்தியுள்ளனர். மக்கள் கூறுகையில், 'நகர சுகாதார மையம் செயல்பட்டு வரும் கட்டடத்தில் போதிய இட வசதி இன்றி நோயாளிகள் திறந்த வெளியில் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். நோயாளிகள் பாதுகாப்பாக காத்திருந்து, சிகிச்சை பெற்று செல்லும் வகையில், நகர சுகாதார மையத்தை புதிய கட்டடத்திற்கு மாற்றுவதற்கு சுகாதார துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ