கர்நாடக இசையை ரசிக்க அது பற்றிய அறிவு இருக்கணும்: நித்யஸ்ரீ மகாதேவன்
பாலக்காடு: ' 'கர்நாடக இசையை சரியாக ரசிக்க, அதைப் பற்றிய அறிவு இருக்க வேண்டும்,'' என, பிரபல கர்நாடக இசைக்கலைஞர் நித்யஸ்ரீ மகாதேவன் தெரிவித்தார். கேரள மாநிலம் பாலக்காடு ராப்பாடி கலையரங்கில், கலை அமைப்பான ஸ்வரலயா சார்பில், நடந்து வரும் நடன சங்கீத உற்சவத்தில் கலந்து கொள்ள வந்த, பிரபல கர்நாடக இசைக்கலைஞர் நித்யஸ்ரீ மகாதேவன் நிருபர்களிடம் கூறியதாவது: கர்நாடக இசையைப் பிரபலப்படுத்த, பள்ளி மட்டத்திலிருந்தே அதைப் பயிற்சி செய்ய வேண்டும். கர்நாடக இசையை சரியாக ரசிக்க, அதைப் பற்றிய அறிவு இருக்க வேண்டும். இதில் குழந்தைகளுக்கு அடிப்படை அறிவை வழங்க திட்டம் வடிவமைத்து, சிறப்பு ஏற்பாடுகள் செய்து வருகிறேன். மார்கழி மாதம் சென்னையில் நடக்கும் சங்கீதக் கச்சேரிகளில், 30 குழந்தைகளை கச்சேரி கேட்பதற்காக அழைத்துச்செல்கிறேன். நான் கலைஞர்களையும், ஆர்வலர்களையும் கடவுளுக்கு அடுத்தபடியாகப் பார்க்கிறேன். வாழ்க்கையில் இசை முக்கியமானது. கர்நாடக இசை பாரம்பரியம் கொண்ட பாலக்காட்டில் இசை நிகழ்ச்சிகள் நடத்துவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு பாடகரின் சிறந்த திறமையை வெளிக்கொண்டு வரும் திறன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உள்ளது. மலையாள மொழி கொஞ்சம் கடினம். ஆனாலும் ஒரு மலையாளத் திரைப்படத்தில் பாடி உள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார். நேற்று முன்தினம் மாலை நடந்த இவரது சங்கீதக் கச்சேரியை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டு வந்திருந்தது குறிப்பிடத் தக்கது.