சிறுமியருக்கு தொல்லை; முதியோர் இருவர் கைது
பந்தலுார்; கூடலுார் அருகே பழங்குடியின கிராமத்தில், பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இரு முதியோர் கைது செய்யப்பட்டனர். நீலகிரி மாவட்டம், கூடலுார் அருகே உள்ள பழங்குடியின கிராமத்தை சேர்ந்த, 5-ம் வகுப்பு படிக்கும் சிறுமிகள் பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. அதில், சில மாணவியர், 'தங்கள் கிராமத்தில் உள்ள மூன்று பேர் பாலியல் தொல்லை கொடுக்கின்றனர்,' என, புகார் தெரிவித்தனர். இதுகுறித்து 'சைல்டு லைன்' நிர்வாகிகளுக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்தனர். அவர்களின் விசாரணைக்கு பின்னர், தேவாலா மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸ் இரு முதியவர்களிடமும் விசாரித்ததில் அவர்கள் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. பின், செரு, 47, என்பவரை மட்டும் போலீசார் கைது செய்தனர். வெள்ளன், 70, விஜயன், 65, இருவரின் வயது முதிர்ச்சி காரணமாக, வழக்கு மட்டும் பதிவு செய்து, 'நீதிமன்றத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்,' என, போலீசார் கூறியிருந்தனர். இது குறித்த செய்தி வெளியான நிலையில், போலீஸ் உயரதிகாரிகளின் உத்தரவுப்படி, முதியோர் இருவரையும் நேற்று கைது செய்த போலீசார், கோவை சிறையில் அடைத்தனர்.