உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / விநாயகர் விசர்ஜன ஊர்வலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

விநாயகர் விசர்ஜன ஊர்வலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

–நிருபர் குழு– ஊட்டியில் நேற்று இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடந்தது. நீலகிரி மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழா நடந்து முடிந்துள்ள நிலையில், இந்து முன்னணி, அகில பாரத அனுமன் சேனா மற்றும் விஸ்வ இந்து பரிசத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில், மாவட்டம் முழுவதும், 550 சிலைகள் வைக்கப்பட்டன. 16ம் தேதி, சில அமைப்புகளின் சார்பில், ஊட்டி, கோத்தகிரி, குன்னுார் உட்பட, பல்வேறு இடங்களில் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. இந்நிலையில் நேற்று, ஊட்டியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடந்தது. ஊட்டி நகரம் மற்றும் புறநகர பகுதிகளில் இருந்து, காலை முதல், 150 சிலைகள் கொண்டு வரப்பட்டு, தேவாங்கர் திருமண மண்டபத்தில் வைத்து பூஜை செய்யப்பட்டது. அங்கு, ஆன்மிக சொற்பொழிவு பொதுக்கூட்டம் நடந்தது. இந்து முன்னணி மாவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்ட பொருளாளர் கார்த்திக், செயற்குழு உறுப்பினர் கரண் பாலாஜி, மாவட்ட துணைத் தலைவர் சுப்ரமணி மாறும் இந்து வியாபாரிகள் சங்க தலைவர் சுரேஷ்குமார், ரகுராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணன், ஊட்டி எம்.எல்.ஏ., போஜராஜன் ஆகியோர் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். ஊட்டி பாம்பே கேசில் சக்தி விநாயகர் கோவிலில் வைக்கப்பட்டிருந்த விநாயகருக்கு, 150 கிலோ எடையுள்ள ‘மெகாலட்டு வைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, 2:30 மணிக்கு ஊர்வலம் துவங்கியது. சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை பிங்கர் போஸ்ட் வழியாக காமராஜர் சாகர் அணையில் விசர்ஜனம் செய்யப்பட்டது. * குன்னுாரில் இந்து முன்னணி சார்பில் விசர்ஜன ஊர்வலம் கோலாகலமாக நடந்தது. விழாவையொட்டி கணபதி ஹோமம், மகா ஆரத்தி, ரத்ததான முகாம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக, சமூக நிகழ்வுகள் நடந்தன. சிம்ஸ்பூங்கா அருகே மாவட்ட தலைவர் சந்திரன் தலைமையில் நிறைவு விழா பொதுகூட்டம் நடந்தது. அகத்தியர் மடம் சரோஜினி ஆசியுரை வழங்க, மாநில செயலாளர் தாமு வெங்கடேஸ்வரன் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, மேளதாளங்கள் முழங்க, காளி மற்றும் கருப்பராயர் வேடமணிந்த கலைஞர்களின் ஆட்டத்துடன் ஊர்வலம் புறப்பட்டது. மகளிர் கைகளில் சிறிய சிலைகளை ஏந்திச் செல்ல, பெட்போர்டு, மவுண்ட் ரோடு, பேருந்து நிலையம் வழியாக ஊர்வலம் சென்றது. 50 பெரிய சிலைகள் உட்பட108 சிறிய சிலைகள் லாஸ் நீர்வீழ்ச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு விசர்ஜனம் செய்யப்பட்டன. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்