உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சாலையோரத்தில் முகாமிட்ட காட்டு யானைகள்; கண்காணிப்பில் வனத்துறை பணியாளர்கள்

சாலையோரத்தில் முகாமிட்ட காட்டு யானைகள்; கண்காணிப்பில் வனத்துறை பணியாளர்கள்

பந்தலுார் : பந்தலுார் அருகே மக்கள் நடமாடும் சாலையோர பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.பந்தலுார் அய்யன்கொல்லி அருகே யானைகள் முகாமிட்டு மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. அதில், மூலக்கடை மற்றும் கோட்டப்பாடி உள்ளிட்ட பகுதிகளில், கட்டை கொம்பன், புல்லட், ஒற்றை கொம்பன் ஆகிய மூன்று யானைகளும் சாலையோர காபி தோட்டம் மற்றும் புதர் பகுதிகளில் முகாமிட்டு உள்ளன.இந்த யானைகள் அடிக்கடி சாலையை கடந்து செல்லும் நிலையில், இந்த பகுதியில் சேரம்பாடி மற்றும் பிதர்காடு வனத்துறை பணியாளர்கள் முகமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சாலையில் நடந்து செல்லும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு பாதுகாப்பாக நின்று, அவர்கள் சாலையை கடக்க உதவி செய்கின்றனர்.அதில், புல்லட் என்ற யானை மனிதர்களை பார்த்தால் துரத்தி தாக்கும் குணம் கொண்ட நிலையில், கடந்த இரண்டு நாட்களாக வனத்துறை பணியாளர்கள் இந்த யானையை பார்த்து ஓடி உயிர்தப்பினர்.மக்கள் கூறுகையில், 'இங்கு முகாமிட்டுள்ள இந்த மூன்று யானைகளையும் கும்கிகள் உதவியுடன், அடர்த்தியான வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ