உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மழை பாதிப்பு தொடரும் ஊட்டிக்கு நிலத்தடி மின் கேபிள் திட்டம் வருமா? மரம் விழுந்து மின்தடை ஏற்படுவதால் பாதிப்பு

மழை பாதிப்பு தொடரும் ஊட்டிக்கு நிலத்தடி மின் கேபிள் திட்டம் வருமா? மரம் விழுந்து மின்தடை ஏற்படுவதால் பாதிப்பு

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் பருவ மழை சமயங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படாமல் இருக்க நிலத்தடி மின் கேபிள் திட்டம் அவசியமாகி உள்ளது.நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழையின் போது, பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது வழக்கம். அதில், மண்சரிவு, நிலச்சரிவு அபாயங்களால் சாலை துண்டிக்கப்படுகிறது. மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்து பாதிக்கப்படுவதால், பல நாட்கள் மின்தடை ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டும் உரிய நடவடிக்கை இல்லை.

கடந்த ஒரு வாரமாக மழை

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு மேல் நீடிக்கும் கனமழையால், குந்தா, ஊட்டி, கூடலுார், பந்தலுார் மின் வட்டங்களில் ஏராளமான கிராமங்களின் மூன்று நாட்களுக்கு மேலாக மின்தடை நீடித்தது. அவ்வப்போது மின் வினியோகம் இருந்தாலும், அடிக்கடி ஏற்படும் மின் தடையால் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஊட்டி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், குடிநீர் வினியோகம் ஸ்தம்பித்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பலத்த காற்றுடன் தொடரும் மழையால் சீராக மின்சாரம், குடிநீர் வினியோகம் இன்னும் மக்களுக்கு கிடைக்கவில்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

நிலத்தடி மின் கேபிள்

நீலகிரி மாவட்டம், 65 சதவீதம் வனப்பகுதியை கொண்டதாகும். வனத்துக்கு இடையே, அணை, தடுப்பணைகள் உள்ளன. பருவ மழையின் போது வனப்பகுதியில் மரங்கள் மின் கம்பத்தின் மீது விழுவதால் மின்தடை ஏற்படுகிது'இதற்கு தீர்வு கண்டு, சீராக குடிநீர் வினியோகம் செய்யும் வகையில், நிலத்தடி மின் கேபிள் கொண்டு வர வேண்டும்,' என, மலை மாவட்ட மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.ஆனால், மாவட்ட நிர்வாகம் இதற்கான நடவடிகை இன்னும் எடுக்காமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஊட்டி சர்வதேச சுற்றுலா ஸ்தலமாக இருப்பதால் ஆண்டுக்கு பல லட்சம் சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். பருவ மழை சமயத்தில் மின்தடை, சீரான குடிநீர் வினியோகத்திற்கு நிலத்தடி மின் கேபிள் திட்டம் அவசியமாகும். முதற்கட்டமாக ஊட்டியில் இந்த திட்டத்தை கொண்டு வர வேண்டும். தொடர்ந்து, மாவட்டத்தில் முக்கிய பகுதிகளில் ஆய்வு நடத்தி மாவட்ட நிர்வாகம் வாயிலாக அரசுக்கு கருத்துரு அனுப்பி பிரத்யேக திட்டத்தை வகுக்க வேண்டும்,' என்றார்.

இன்னும் நிறைவேறவில்லை...

ஊட்டியில் நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. பெரும்பாலான வார்டுகளுக்கு பார்சன்ஸ் வேலி குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அணையில் இருந்து மின்மோட்டார் வாயிலாக தண்ணீர் கொண்டு வந்து தொட்டியில் சேகரிக்கப்பட்ட பின், பல கி.மீ., துாரம் அமைக்கப்பட்ட குழாய் வாயிலாக தண்ணீர் கொண்டு வந்து வார்டுகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. வனத்திற்கு இடையே மின் மோட்டார் அமைக்கப்பட்டு இருப்பதால் பருவ மழையில் போது அடிக்கடி மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்து பல நாட்கள் குடிநீர் தடைப்படுவது வாடிக்கையாகி விட்டது. நிலத்தடி மின் கேபிள் அமைக்க நகராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பல ஆண்டுகளாகியும் திட்டம் நிறைவேறவில்லை. மாநில அரசு சமீபத்தில் பார்சன்ஸ் வேலி நீரேற்று மையத்திற்கு, 6 கோடி ரூபாய் நிதியில் நிலத்தடி மின் கேபிள் அமைக்க நிதி ஒதுக்கி உள்ளது. எனவே, இந்த திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ