| ADDED : ஜூலை 09, 2024 10:38 PM
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், அறிவியல் இயக்கமும் இணைந்து, புத்தகத் திருவிழா புதுக்கோட்டை அரசு மன்னர் கலைக்கல்லுாரி மைதானத்தில் வரும் 27ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் புத்தக வாசிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் மாவட்ட நிர்வாகம் வினோதமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.அரசு பள்ளிகள், அரசு உதவி பள்ளிகள் பெறும் மற்றும் அனைத்து கல்லுாரிகள், நூலகங்கள், அரசு அலுவலகங்களிலும், அமர்ந்து தங்களுக்கு பிடித்தமான நுாலை நேற்று காலை 10:00 மணி முதல் தொடங்கி 11:00 மணி வரை வாசித்தனர். இவ்வாறு, மாவட்டம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லுாரிகளில், புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்ச்சியில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று, ஒரு மணி நேரம் புத்தகம் வாசித்தனர். புதுக்கோட்டை அரசு மன்னர் கலைக்கல்லுாரியில் நடைபெற்ற, புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்ச்சியில், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சிரம்யா கலந்து கொண்டு மாணவ, மாணவிகளோடு அமர்ந்து தானும் ஒரு மணி நேரம் புத்தகம் வாசித்தார். இதில், புத்தகத்திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் கவிஞர் தங்கம்மூர்த்தி, மணவாளன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.