சரணாலயங்களுக்கு பறவைகள் வருகை.. குறைந்தது; வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பு
ராமநாதபுரம் : கோடை வெயிலின் தாக்கம் காரணமாக ராமநாதபுரம் அருகே தேர்த்தங்கல் உள்ளிட்ட மாவட்ட சரணாலயங்களுக்கு பறவைகள் வருகை குறைந்துள்ளது. மாறாக அங்கிருந்து பறவைகள் இடம் பெயர்கின்றன.ராமநாதபுரம் மாவட்டம் தேர்த்தங்கல், மேலச் செல்வனுார், சித்திரங்குடி, காஞ்சிரங்குடி ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இவ்விடங்களுக்கு ஆண்டும்தோறும் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்காக வருகின்றன.குறிப்பாக கூழைக்கடா, செங்கால் நாரை, கரண்டிவாயன், மஞ்சள் மூக்கு நாரை இனப்பெருக்கம் செய்வதற்காக அக்., மாதம் வந்து மார்ச் வரை தங்கி கூடுகள் கட்டி குஞ்சு பொரித்து அதன்பின் இடம்பெயர்கின்றன. இவ்வாண்டு வடகிழக்கு பருவமழை அக்.,ல் குறைவாக பெய்ததால் சரணாலங்களுக்கு பறவைகள் ஆரம்பக்கட்டத்தில் வரவில்லை. இந்நிலையில் நவ., டிச., மாதங்களில் பெய்த மழையால் சரணாலயம், கண்மாய், குளங்களில் தண்ணீர் உள்ளது. குறிப்பாக தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதன் காரணமாக வெளியூர் பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து தங்கின. தற்போது சீசன் முடியும் தருவாயில் கோடைவெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.இதனால் காலை 6:00 முதல் 8:00 மணி, மாலை 5:00 மணிக்கு மேல் தான் பறவைகளை காணமுடிகிறது. குறிப்பாக சீசனுக்கு வலசை வந்த வெளியூர் பறவைகள் இடம்பெயர்ந்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.-------