| ADDED : மே 10, 2024 04:45 AM
கமுதி: கமுதி அருகே பெரியமனக்குளம் கண்மாயில் நவ.,ல் பருவமழை காலத்தில் பெய்த மழையால் கண்மாய் மடை உடைந்து தண்ணீர் வீணாகியது. தற்போது வரை இந்த மடைகள் சீரமைக்கப்படாததால் விவசாயிகள் கவலை அடைந்துஉள்ளனர்.நவ.,ல் பருவமழை காலத்தில் விருதுநகர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த மழையால் பந்தல்குடி, பரளச்சி, கஞ்சம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கண்மாய்கள் நிரம்பி அங்கிருந்து வந்த மழைநீர் ராமநாதபுரம் மாவட்டம் முஷ்டக்குறிச்சி ஊராட்சிக்கு பெரியமனக்குளம் பெரிய கண்மாயில் தண்ணீர் நிரம்பியது. இந்த கண்மாய் முழு கொள்ளளவை அடைந்த நிலையில் மடை உடைந்து தண்ணீர் வெளியேறியது. இந்த தண்ணீரானது கமுதி ஒன்றியத்திற்கு உட்பட்ட புரசலுார், கே.வாகைகுளம், பம்மனந்தல், கோவிலாங்குளம், கொம்பூதி வழியாக கடலாடி அடுத்த மலட்டாறில் இருந்து கடலில் கலந்து வீணாகியது. பெரிய மனக்குளம், சின்ன மனக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வீணாகிய தண்ணீரால்பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது. இப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துஉள்ளனர். கண்மாய் உடைப்பை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மழைக்காலம் முடிந்த பிறகு புதிய மடை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது பருவமழை காலம் முடிந்து 6 மாதம் கடந்த நிலையில் கோடை காலத்தில் கண்மாயில் தண்ணீர் இல்லாமல் வறண்டுள்ளது. கண்மாய் மடை உடைப்பு தற்போது வரை சீரமைக்கப்படாமல் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துஉள்ளனர்.