| ADDED : ஜூலை 02, 2024 10:11 PM
ராமநாதபுரம் : இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள 25 ராமேஸ்வரம் மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாட்டுப் படகு மீனவர் நலஉரிமைச் சங்கத்தினர் வலியுறுத்தினர்.ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப்படகு மீனவர் நல உரிமைச் சங்கம் தலைவர் ராயப்பன் தலைமையில்,செயலாளர் சத்தியசீலன், பொருளாளர் சந்தியா ஆகியோர் கொண்ட குழுவினர் கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் மனு அளித்தனர். இதில் ஜூலை 1ல் பாம்பன், தங்கச்சிமடம், நம்புதாளையைச் சேர்ந்த 4 நாட்டுப்படகுகள், 25 மீனவர்கள் கச்சத்தீவு பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்த போது இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 25 மீனவர்கள், 4 நாட்டுப்படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.