கருமலையான் கோயில் களரி உற்ஸவம் 1000 கிடா பலியிட்டு நேர்த்திக்கடன்
பரமக்குடி : -பரமக்குடி அருகே கலையூர் கிராமத்தில் உள்ள கருமலையான் கோயில் ஆவணி மாத களரி உற்ஸவ விழாவில் 1000 கிடாக்கள் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். கலையூர் கருமலையான் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆவணி மாத விழா நடப்பது வழக்கம். களரி விழாவையொட்டி புதிய வன்னி மரம் கண்டெடுத்து கழுமரம் தயார் செய்து கிராம மக்கள் கோயிலின் நடுவில் நட்டு பூஜைகளை நடத்தினர். தொடர்ந்து மரத்திற்கு அபிஷேக தீபாராதனைகள் நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 1000 கிடாக்கள் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தி விருந்து படைத்தனர். உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் நோயின்றி வாழவும் தீய சக்திகளை விரட்டும் வகையில் சாமி ஆடிகள் விபூதி அடித்து பேய் விரட்டும் நிகழ்ச்சி நடந்தது.அவர்கள் அருகில் உள்ள குளத்தில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.