மழையின்றி நெல் சாகுபடி பணி பாதிப்பு: விவசாயிகள் கவலை
ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்குடி, பூலாங்குடி, எட்டியத்திடல், முத்துப்பட்டினம், சேத்திடல், சீனாங்குடி, வண்டல், வரவணி, ஆனந்துார் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நெல் விதைப்பு பணி துவங்கியது.அப்பகுதிகளில் விவசாயிகள் பருவ மழையை எதிர்பார்த்து நேரடி நெல் விதைப்பு செய்துள்ளனர். இந்நிலையில் சில பகுதிகளில் நெல் விதைப்பு செய்து 10 நாட்களுக்கு மேலாகியும், பருவ மழை இல்லாததால் விவசாயிகள் பருவமழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் அவ்வப்போது லேசான மழையுடன் போக்கு காட்டுவதால் நெல் விதைப்பு செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.