| ADDED : ஆக 06, 2024 04:47 AM
பரமக்குடி: -பரமக்குடி அருகே புதுக்குடி வினோபா நகரில் வேளாண் தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட முகாம் நடந்தது.முகாமில் முதல்வரின் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் சமச்சீர் உர பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கண்ணையா தலைமை வகித்து பேசுகையில், பயிர் சாகுபடிக்கு முன் மண் பரிசோதனை அடிப்படையில் உரமிட்டால் ரசாயன உர பயன்பாட்டை குறைக்க முடியும். பசுந்தாள் உரப் பயிர்களை சாகுபடி செய்து மடக்கி உழுதால் மண் வளம் மேம்படும் என்றார். பரமக்குடி வேளாண் உதவி இயக்குனர் மனோகரன், வேளாண் அலுவலர் சீதாலட்சுமி, வேளாண் அலுவலர்கள் கார்த்திகேயன், ஆர்த்தி பங்கேற்றனர். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப அலுவலர்கள் சிவகுமார், தங்கவேல் செய்திருந்தனர்.