| ADDED : மே 28, 2024 06:22 AM
திருவாடானை, : நிலத்துக்கான அரசு வழிகாட்டி மதிப்பை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.தமிழக அரசு தற்போது நடைமுறைப்படுத்த இருக்கும் நிலத்துக்கான அரசு வழிகாட்டி மதிப்பு 70 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. மார்க்கெட் விலையில் இருந்து உயர்த்துவதற்கு தற்போது சர்வே எடுக்கும் பணிகளில் திருவாடானை, தொண்டி சார்பதிவாளர் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.இந்த வழிகாட்டி மதிப்பால் மக்கள் பாதிக்கபட்டுள்ளார்கள். இது குறித்து நிலத் தரகர்கள் கூறுகையில், ஏற்கனவே முத்திரை கட்டணம், பதிவு கட்டணம் உயர்ந்துள்ளது. 70 சதவீதம் அரசு வழிகாட்டி மதிப்பின் உயர்வால் நிலங்கள், வீடு விற்பனையும், கட்டுமானமும், தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும் பாதிக்கும்.வழிகாட்டி மதிப்பீடு உயர்வால் வீடு, நிலம் வாங்குவோர், விற்போர், எங்களை போன்ற முகவர்கள், தரகர்கள் மட்டுமின்றி கட்டுமானத் துறை, அதனை சார்ந்த அனைத்து துறைகளும் கடுமையாக பாதித்து வேலைவாய்ப்பை இழப்பார்கள். ஆகவே அரசு கொண்டு வரும் வழிகாட்டி மதிப்பு உயர்வை ஐந்து முதல் பத்து சதவீதம் வரை உயர்த்தி பொதுமக்களையும் அதனை சார்ந்தவர்களையும் காப்பாற்ற வேண்டும் என்றனர். இதுகுறித்த செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது. அதனை தொடர்ந்து ராமநாதபுரத்தில் கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் நில மதிப்பீடு குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார். வருவாய்த்துறையினர் கூறுகையில், நிலத்துக்கான மதிப்பீடை குறைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கும் பணிகளும், சர்வே எடுக்கும் பணிகளும் நடந்து வருகிறது. இதில் நில மதிப்பு குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.