5 நாட்களுக்கு பின் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி
ராமேஸ்வரம்: சூறாவளி வேகம் தணிந்ததால் ஐந்து நாட்களுக்குப் பின் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்ல மீன் துறையினர் இன்று (ஆக., 26) அனுமதித்தனர்.தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்து ஆக.,21 முதல் வங்க கடலில் சூறாவளி வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்தது. இதனால் மன்னார் வளைகுடா கடல், பாக்ஜலசந்தி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தன. இதன் காரணமாக ஆக.,21 முதல் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி விசைப்படகு நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர்.நேற்று காற்றின் வேகம் தணிந்ததால் பாம்பனில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்துறையினர் அனுமதி டோக்கன் வழங்கினர். இதனைத் தொடர்ந்து இன்று (ஆக., 26) ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல அனுமதி வழங்கியதாக மீன்துறையினர் தெரிவித்தனர். 5 நாள்கள் தடைக்கு பின் மீன்பிடிக்க செல்வதால் அதிக மீன்வரத்து கிடைக்கும் என ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.