நீதியும், நிதியும் கேட்டு போக்குவரத்து ஓய்வு ஊழியர்கள் இன்று மறியல்
ராமநாதபுரம்: -தமிழகத்தில் அரசு போக்குவரத்து ஓய்வு ஊழியர்கள் அமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டல போக்குவரத்து அலுவலகங்கள் முன்பு இன்று (ஆக.27) மறியல் போராட்டம் நடத்துகின்றனர்.ஓய்வு பெற்றோர் அமைப்பின் மண்டல துணைச்செயலாளர் மணிக்கண்ணு கூறியதாவது:தேர்தல் நேரத்தில் 100 நாளில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என அறிவித்த முதல்வர் 1000 நாட்களை கடந்தும் வழங்காதது ஏன். அகவிலைப்படி உயர்வு இல்லாமல் சொற்ப பென்ஷனில் வாழ முடியாமல் 7000 பேர் உயிரிழந்துள்ளனர்.கடந்த 2022 டிச., முதல் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு எந்த பணப்பலன்களும் வழங்கவில்லை. வாரிசு வேலை வழங்காமல் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிப்பது ஏன். நீதிமன்றத்திற்கு சென்று உத்தரவு பெற்ற பிறகும் அப்பீல் செய்து அரசு இழுத்தடிக்கிறது. இதனை கண்டித்து தமிழக அரசிடம் நீதியும், நிதியும் கேட்டு அரசு போக்குவரத்துக்கழக மண்டல அலுவலகங்கள் முன்பு ஓய்வு பெற்ற ஊழியர்கள் இன்று (ஆக.27) மறியல் போராட்டம் நடத்துகின்றனர்.செப்., 2 வது வாரத்தில் பணிமனைகள் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர் என்றார்.இந்நிலையில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு குறித்த பேச்சு வார்த்தை சென்னையில் இன்று நடக்க உள்ளது.