பழுதான கட்டடத்தில் செயல்படும் 3 அலுவலகங்கள்: விவசாயிகள் தவிப்பு
திருவாடானை : திருவாடானை வட்டார வேளாண் விரிவாக்க மைய கட்டடம் பழுதாகியுள்ள நிலையில், அவ்விடத்தில் மூன்று அரசு அலுவலகங்கள் இயங்குவதால், நெருக்கடியில் அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் தவிக்கின்றனர். திருவாடானை பாரதிநகரில் வேளாண் அலுவலகம் இருந்தது. 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக் கட்டடத்தில் 57 வருவாய் கிராம விவசாயிகளுக்கு பயிற்சிகள் நடத்தப்படும். மேலும் இடுபொருட்கள் வழங்குவது, அரசு அறிவிக்கும் திட்டங்கள் குறித்து விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறுவது போன்ற பல்வேறு பணிகள் நடந்தன. மாடியில் தோட்டக்கலைத்துறை அலுவலகம் செயல்பட்டது. கட்டடம் சேதமடைந்து மழை நீர் இறங்கி, சுவர்களில் விரிசல் ஏற்பட்டு இரு ஆண்டுகளுக்கு முன்பு பக்க சுவர் இடிந்து விழுந்தது. இதனால் இரு அலுவலகங்களும் திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மைய கட்டத்திற்கு மாறுதல் செய்யபட்டது. இது குறித்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த கவாஸ்கர் கூறியதாவது- தற்போது இயங்கும் இக் கட்டடமும் பாழடைந்துள்ளது. குறுகிய இடத்தில் அமைந்துள்ள இங்கு மூன்று அலுவலகங்கள் இயங்குவதால் பல்வேறு வேலையாக வரும் விவசாயிகள் அமர்வதற்கு இடம் இல்லாமல் தவிக்கின்றனர். சேதமடைந்த வேளாண்மை அலுவலகத்தை சீரமைத்து அங்கு அலுவலகம் இயங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.