ராமேஸ்வரம் மீனவர்கள் 34 பேர் சிறையில் அடைப்பு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 34 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து, 439 விசைப்படகில் மீனவர்கள் நேற்று முன்தினம் மீன் பிடிக்கச் சென்றனர். இந்தியா - இலங்கை எல்லையில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள், துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீன் பிடிக்க விடாமல் அவர்களை விரட்டினர். அச்சமடைந்த மீனவர்கள் வீசிய வலையை படகில் இழுத்து வைத்து கரை திரும்பினர்.அப்போது, மூன்று படகுகளை மடக்கி பிடித்த இலங்கை வீரர்கள், அதில் இருந்த ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 20 முதல் 65 வயது வரையிலான 34 மீனவர்களை பிடித்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.