உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் விடுவிப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் விடுவிப்பு

ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை அந்நாட்டு புதிய அதிபர் அனுரா குமார திசநாயகே கருணை அடிப்படையில் விடுவித்ததால் நேற்று ராமேஸ்வரம் வந்தனர்.ராமேஸ்வரத்தில் இருந்து ஜூன் 23 மீன்பிடிக்க சென்ற 3 விசைப்படகுகளில் இருந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் 19 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். படகின் டிரைவர்கள் மூவருக்கு தலா ரூ.40 லட்சம் அபராதம், செலுத்த தவறினால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு கொழும்பு வெளிக்கடை சிறையில் அடைக்கப்பட்டனர்.இதில் படகு டிரைவர்கள் கருப்பையா 47, ஜெகன் 29, தங்களை விடுவிக்கக் கோரி இலங்கை புதிய அதிபர் அனுரா குமார திசநாயகேவிடம் மனு அளித்தனர். மேலும் ஜூலை 1ல் பாம்பனில் இருந்து நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் ஜெர்ஸி 29, இருதயராஜ் 45, நம்புதாளையை சேர்ந்த ராமு 53, ஆகியோர் ஓராண்டு தண்டனை பெற்று இலங்கை சிறையில் இருந்தனர். இவர்களும் அதிபரிடம் மனு அளித்தனர்.மீனவர்களின் மனுவை பரிசீலித்த அதிபர் ஐந்து பேரையும் விடுவிக்க உத்தரவிட்டார். விடுதலையான 5 மீனவர்களும் நேற்று காலை கொழும்பில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் ராமேஸ்வரம் அழைத்து வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !