மணல் கொள்கையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
தேனி மாவட்டம் வருஷநாடு மலைப்பகுதியில் உற்பத்தியாகும் வைகை ஆறு மதுரை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் பெரிய கண்மாயில் முடிவடைகிறது. வற்றாத ஜீவ நதியாக இருந்த வைகையில் தற்போது கழிவு நீர் மட்டுமே பாய்கிறது. தொடர்ந்து மழைக் காலங்களில் தண்ணீர் பெருக்கெடுக்கும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில் ஒட்டுமொத்த வைகை ஆறு கட்டாந்தரையாகி விட்டதால் பரமக்குடி உள்ளிட்ட சில பகுதிகளில் மட்டுமே மணல் பாங்கான இடங்களை பார்க்க முடிகிறது.இதன்படி ஒவ்வொரு பகுதியாக வெளி மாநிலங்கள் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு மணல் குவாரிகள் அமைத்து அதிகளவில் மணல் அள்ளப்பட்டது. மேலும் சர்வ சாதாரணமாக மாட்டு வண்டிகள் உட்பட பல்வேறு வழிகளில் மணல் கொள்ளை நடக்கிறது. தொடர்ந்து பரமக்குடி பகுதியில் புல்வெளிகளுக்கு அடியில் மணல் அதிகமாக உள்ளது. இதனை பயன்படுத்தி இரவு நேரங்களில் மூடை கட்டி மணலை டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் கொண்டு செல்கின்றனர். ஒவ்வொரு மூடை மணலும் துாரங்களுக்கு ஏற்ப 200 முதல் 300 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்கின்றனர். இதனால் ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில் பள்ளங்களை அறிய முடியாமல் விபத்துக்கள் ஏற்படுகிறது. மேலும் குடிநீர் ஆதாரத்திற்கு தண்ணீர் திறக்கும் சூழலில் தண்ணீரை சேமித்து வைக்க மணல் இன்றி ஊற்று நீருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மணல் கொள்ளையை தடுக்க பரமக்குடி வருவாய், கனிம வளம், போலீஸ், நீர் வளத்துறை என குழு அமைக்கப்பட்டது.எனவே ஒட்டுமொத்த அரசு நிர்வாகம் மணல் கொள்கையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.