உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புயல் எச்சரிக்கையால் தொண்டி காரங்காட்டில் படகு சவாரி நிறுத்தம்

புயல் எச்சரிக்கையால் தொண்டி காரங்காட்டில் படகு சவாரி நிறுத்தம்

திருவாடானை; புயல் எச்சரிக்கையால் தொண்டி அருகே காரங்காட்டில் மாங்ரோவ் காடுகளை சுற்றுலாப்பயணிகள் ரசிப்பதற்கான படகு சவாரி நிறுத்தப்பட்டது.ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காரங்காடு கடற்கரை சதுப்பு நிலக்காடுகளை உள்ளடக்கி அமைந்துள்ளது. இயற்கை தந்த கொடையாக அனைவரின் மனதைக் கவரும் வகையில் இங்கு மாங்குரோவ் காடுகள் அடர்த்தியாக உள்ளன. சூழல் சுற்றுலா மையமான இங்கு மாங்ரோவ் காடுகளின் அழகை ரசிக்க வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். சுற்றுலா பயணிகளை அழைத்து கடலுக்குள் சென்று மாங்ரோவ் காடுகளை சுற்றிக் காட்டுவதற்காக வனத்துறை சார்பில் படகு சவாரி, கயாக்கிங் எனப்படும் துடுப்பு சவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அலையாத்தி(மாங்ரோவ்) காடுகளுக்கு இடையே செல்லும் போது பறவைகளை கண்டு ரசிக்கலாம். விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர். கடந்த சில நாட்களாக தொடர் மழையால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்தது. தற்போது வங்க கடலில் புயல் எச்சரிக்கையால் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.வனத்துறையினர் கூறுகையில், புயல் எச்சரிக்கை அறிவிப்பால் படகு போக்குவரத்து நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வந்த பின் படகு போக்குவரத்து மீண்டும் துவங்கும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ