வீட்டில் வளர்க்கலாமே: ரோட்டில் திரிவதால் விபத்தில் பலியாகும் கால்நடைகள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ் வரம், திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை, தேவிப்பட்டினம் உள்ளிட்ட புனித ஆன்மிக தலங்கள், கடற்கரை சுற்றுலா தலங்கள் உள்ளன. இவ்விடங்களுக்கு வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் வருவது அதிகரித்துள்ளது. குறிப்பாக ராமேஸ்வரத்திற்கு அதிகளவில் வாகனங்களில் வருகின்றனர்.இந்நிலையில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், நகர், புறநகர் உட்புற சாலைகளில் ஆடு, மாடு, குதிரை உள்ளிட்ட கால்நடைகள் ரோட்டில் திரிகின்றன. குறிப்பாக வீடுகளில் வளர்க்க வேண்டிய மாடுகளை மேய்ச்சலுக்காக ஊருக்குள் அவிழ்த்து விடுகின்றனர்.குறிப்பாக ராமேஸ்வரம்- - மதுரை ரோடு பட்டணம்காத்தான், அச்சுந்தன்வயல், ராமநாதபுரம் நகர் ரோடுகளில் பகல், இரவு என நேரம் காலமின்றி கால்நடைகள் உலா வருகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக கலெக்டர் அலுவலக வளாகம் ஆடு, மாடுகளின் மேய்ச்சல் இடமாகவே மாறிவிட்டது. இவை நடு ரோட்டில் வரும் போது வேகமாக வரும் வாகனங்களால் விபத்தில் சிக்கி காயமடைகின்றன. நேற்று பட்டணம்காத்தான் பழைய செக்போஸ்ட் அருகே விபத்தில் காயமடைந்த பசுமாடு இறந்து கிடந்தது. எனவே உரிமையாளர்கள் கால்நடைகளை தெருக்கள், ரோடுகளில் விடுவதை தவிர்க்க வேண்டும்.வீட்டில் கட்டி வைத்து வளர்க்க வேண்டும். இதை மீறினால் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும். கால்நடைகளை பறிமுதல் செய்து ஏலமிட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் அறிவிக்கின்றனர். இவ்விஷயத்தில் போக்குவரத்து துறை, நகராட்சி, ஊராட்சி நிர்வாக அதிகாரிகளின் பெயரளவு நடவடிக்கையால் சம்பந்தப்பட்ட உரிமையாளர் எவ்வித அச்சமின்றி தொடர்ந்து கால்நடைகளை மேய்சலுக்காக ரோட்டில் விடுவது வாடிக்கையாகியுள்ளது. இரவு நேரத்தில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள், கால்நடைகளால் ஆண்டுதோறும் 30க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடக்கிறது. எனவே ரோட்டில் திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்யவும், அதன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.