பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
ராமேஸ்வரம் : -வங்க கடலில் உருவான காற்று அழுத்த மண்டலத்தால் ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இது இன்று காலை ஒடிசா கோபால்பூர், பாரதீப் இடையே கரை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் தொலைதுார புயல் எச்சரிக்கையாக பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் நேற்று மாலை 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதனால் பாம்பன் கடற்கரையில் படகுகளை பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும் ஆழ்கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன் துறையினர் வலியுறுத்தினர்.