வைகை ஆறு தரைப்பாலத்தில் பில்லர்கள் சேதம்: விபத்து அபாயம்
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் தரைப்பாலத்தில் தடுப்பு கம்பிகள் இல்லாத நிலையில் பில்லர்கள் உடைந்துள்ளதால் விபத்து அபாயம் உள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரத்தில் 8 வார்டுகள் உள்ளன. இங்கு பரமக்குடி எஸ்.எஸ். கோவில் தெரு மற்றும் எமனேஸ்வரம் நயினார்கோவில் ரோட்டை இணைக்கும் வகையில் தரைப்பாலம் உள்ளது. இப்பாலத்தில் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. மாணவர்கள் உட்பட மக்கள் நடந்து செல்கின்றனர். இப்பாலத்தில் 8 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி மாணவி ஒருவர் டிராக்டர் மோதி பலியானார். இதையடுத்து தடுப்பு பில்லர்கள் அமைக்கப்பட்டு கனரக வாகனங்கள் செல்ல முடியாத வகையில் கம்பிகள் குறுக்கே அமைக்கப்பட்டன. தொடர்ந்து டூவீலர், ஆட்டோ மற்றும் சைக்கிள் என பள்ளி மாணவர்கள் செல்கின்றனர். ஆனால் கடந்த சில மாதங்களாக பில்லர்கள் உடைந்து கம்பிகள் அனைத்தும் காணாமல் போய் உள்ளது. இதனால் விபத்து அபாயம் உள்ளது. கனரக வாகனங்கள் செல்ல முடியாத வகையில், ஆபத்தை ஏற்படுத்தும் பில்லர்களை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.