கீழக்கரை பஸ் ஸ்டாண்ட் அருகே ஆபத்தான பள்ளம் தரமற்ற கட்டுமானப் பணி
கீழக்கரை: கீழக்கரை பஸ் ஸ்டாண்ட் அருகே அம்மா உணவகம் செல்லும் வழியிலும் கடந்த ஆண்டு கட்டப்பட்ட வாறுகால் சேதமடைந்துள்ளது.கீழக்கரை பஸ்ஸ்டாண்டிற்கு வரக்கூடிய ஆட்டோ, கார் உள்ளிட்ட கனரக வாகனங்கள் இந்த வாறுகால் பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. பஸ் ஸ்டாண்டின் முன்புறம் உள்ள ஆபத்தான சேதமடைந்த வாறுகால் பள்ளத்தால் இரவில் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். அப்பகுதியில் வெளிச்சம் குறைவாக உள்ள நிலையில் இது போன்ற ஆபத்தான பள்ளத்தால் விபத்து அபாயம் நிலவுகிறது.பொதுமக்கள் கூறியதாவது: கீழக்கரை நகராட்சி பஸ் ஸ்டாண்டில் இருந்து லட்சுமிபுரம், அண்ணா நகர், முத்துசாமிபுரம், சிவகாமிபுரம், அலவாய்கரைவாடி செல்லக்கூடிய பிரதான சாலையின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள சிறு பாலம் தரமற்றதாக உள்ளது. இதனால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி தரமான கட்டுமான பணிகளை செய்ய நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும். எனவே கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர் இது போன்ற ஆபத்தான பள்ளங்களை சீரமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.