சேத்தாண்டி வேடம் அணிந்து வந்த நேர்த்திக்கடன் பக்தர்கள்
கமுதி: கமுதி அருகே பம்மனேந்தல் கிராமத்தில் குருநாத சுவாமி கோயில் குருபூஜை விழாவை முன்னிட்டு பக்தர்கள் சேத்தாண்டி வேடம், பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.கமுதி அருகே பம்மனேந்தல் கிராமத்தில் குருநாத சுவாமி கோயில் 49வது குருபூஜை விழா, பெரிய நாச்சியம்மன், சித்தி விநாயகர், படர்ந்தபுளி கற்பக விநாயகர் கோயில் பொங்கல் விழா நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் சிறப்பு பூஜை அபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு குருநாத சுவாமி கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து கிராமத்தின் முக்கிய வீதியில் ஊர்வலமாக பெரிய நாச்சியம்மன் கோயிலுக்கு வந்தனர். பின் அம்மனுக்கு பால் அபிஷேகம் தீபாராதனை நடந்தது. பக்தர்கள் சேத்தாண்டி வேடமணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் சகதியை உடலில் பூசி கொண்டால் தோல் நோய், அம்மை நோய் உள்ளிட்ட நோய் ஏற்படாது என்பது ஐதீகமாக பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கமுதி அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பலர் கலந்து கொண்டனர்.