சேறும் சகதியுமான ரோட்டில் சிரமம்
முதுகுளத்துார், : முதுகுளத்துார் கொன்னையடி விநாயகர் தெருவில் மழைநீர் செல்ல வழியின்றி தெருக்களில் தேங்கி ரோடு சேறும் சகதியுமாக மாறியதால் நடப்பதற்கே மக்கள் சிரமப்படுகின்றனர்.முதுகுளத்துார் பேரூராட்சி 1-வது வார்டில் உள்ள கொன்னையடி விநாயகர் தெருவில் 50க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு கடந்த பல ஆண்டுகளாக ரோடு வசதியில்லை. மழை பெய்தால் தண்ணீர் செல்ல வழியில்லாமல் வீடுகளுக்கு முன்பு தெருக்களில் குளம்போல் தேங்குகிறது. கடந்த பருவமழை காலத்தில் தேங்கிய மழைநீரை மோட்டார் வைத்து வெளியேற்றினர்.ரோட்டில் கிராவல் மண் கொட்டி சமன் செய்தனர். தற்போது பெய்த மழைக்கு மழைநீர் செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கியுள்ளது. ரோடு சேறும் சகதியுமாக மாறி இருப்பதால் நடப்பதற்கு மக்கள் சிரமப்படுகின்றனர். பள்ளி மாணவர்கள் முகம் சுளிக்கின்றனர்.எனவே கொன்னையடி விநாயகர் தெருவில் புதிய ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.