கண்மாய்களை பராமரிக்க விவசாயிகள் வலியுறுத்தல்
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் உள்ள கண்மாய்களை கோடைகாலம் முடிவதற்குள் பராமரிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர். திருவாடானை தாலுகாவில் 89 பொதுப்பணித்துறை கண்மாய்களும், 250 ஊராட்சி ஒன்றிய கண்மாய்களும், 500க்கும் மேற்பட்ட ஊருணிகளும் உள்ளன. தாலுகாவில் ஆண்டுதோறும் 26,650 எக்டேரில் நெல் சாகுபடி நடக்கிறது. தாலுகாவை பொறுத்தவரை ஆண்டுதோறும் மழை பொழிவு குறைவாகத் தான் இருக்கும்.கடந்த மூன்று ஆண்டுகளாக காலநிலை மாற்றத்தால் பருவமழை அதிகமாக பெய்ததால் பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பியது. இனிவரும் காலங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலையாளர்கள் அறிவித்துள்ளனர். அப்படி மழை பெய்தால் கண்மாய்கள் உடையும் அபாயம் ஏற்படும்.அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் நிலைகளில் கட்டமைப்புகளை பராமரிப்பு செய்ய வேண்டும். விவசாயிகள் கூறியதாவது:அந்தக் காலத்தில் கிராமங்களில் உள்ள ஆறுகள், கண்மாய்கள், குளங்கள், ஊருணிகள், தெப்பக்குளங்கள் ஆகியவற்றிக்கு நீர் செல்லும் வகையில் கால்வாய்கள் அமைந்திருக்கும். ஒவ்வொரு நீர் நிலையும் நிறைந்து மற்றவைகளுக்கு செல்லும் வகையில் கட்டமைப்பை ஏற்படுத்தியிருந்தனர்.உபரி நீர் கடலுக்கும் செல்லும் வகையில் அமைப்பு இருந்தது. கோடை காலங்களில் இவற்றை முறையாக துார்வாரி கால்வாய்களை பராமரித்து வந்தததால் பலத்த மழை பெய்தால் கூட சமாளிக்கும் வகையில் இருந்தது. ஆனால் இன்றைக்கு நீர் நிலைகளை பராமரிக்க தவறியதால் கால்வாய், கண்மாய், ஊருணிகள் அருகில் ஆக்கிரமிப்புகள் அதிகமாகி விட்டதால் மழையை சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே இனி வரும் காலங்களில் பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்ப அரசு விழிப்புடன் நீர் நிலைகளை புதுப்பிக்க வேண்டும். விவசாயத்தை பாதுகாக்க புதிய தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்றனர்.