உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  உரம் தட்டுப்பாட்டால் விவசாயிகள் கவலை யூரியாவுடன் கூடுதல் உரம் வாங்க நிர்பந்தம்

 உரம் தட்டுப்பாட்டால் விவசாயிகள் கவலை யூரியாவுடன் கூடுதல் உரம் வாங்க நிர்பந்தம்

பரமக்குடி: பரமக்குடி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உரம் தட்டுப்பாடு உள்ள சூழலில் யூரியாவுடன் கூடுதல் உரம் வாங்க நிர்பந்திப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஹெக்டேரில் ஒரு போக நெல் சாகுபடி நடக்கிறது. செப்., அக்., மாதங்களில் விதைப்பு துவங்கி நவ., டிச.,ல் உரத்தேவை உள்ளது. இதன்படி உரம் மாவட்டம் முழுவதும் வேளாண் துறை (டான்பெட்) மூலம் அரசு மற்றும் தனியார் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது. தற்போது யூரியா வாங்கினால் அதோடு ஏதேனும் ஒரு பெயரில் உள்ள கூடுதல் உரம் வாங்க விவசாயிகள் நிர்ப்பந்திக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். கூட்டுறவு சங்கங்களில் 30 சதவீதம் தேவையைத் தான் பூர்த்தி செய்ய முடியும் என்ற நிலையில், தனியார் கடைகளில் உரம் வாங்க வேண்டிய நிலை உள்ளது. ஆகவே உர நிறுவனங்களுக்கு லாபம் ஈட்டித் தரும் இச்செயலை தவிர்க்க வேண்டும். தற்போது குறிப்பிட்ட பகுதிகளில் மழை இன்றியும், அதிக மழையாலும் விவசாயிகள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இந்நிலையில் யூரியா விற்பனை என்பது மாற்று உரங்களையும் வாங்கினாலே கிடைக்கும் என்பதால் கூடுதல் விலை கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம், வேளாண்துறை, விவசாயிகள் அடங்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி உர விற்பனையை முறைப்படுத்த வேண்டும். இந்நிலையில் மாவட்ட வேளாண் துறை, யூரியா என்பது தலைச்சத்து மட்டுமே, மணி சத்து பெற கூடுதல் உரங்கள் இடவேண்டும் என்பதால் அவற்றை வாங்க சொல்வதாக தெரிவிக்கின்றனர், என விவசாயிகள் சங்க நிர்வாகி மலைச்சாமி குற்றம் சாட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை