தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ரயில் மறியல் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
ராமேஸ்வரம்:-இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள், படகுகளை விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ரயில் மறியல் செய்ததால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இலங்கை சிறையில் உள்ள 61 மீனவர்கள், படகுகளை விடுவிக்க மத்தியரசு நடவடிக்கை எடுக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் ஆக.,11 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனைதொடர்ந்து நேற்று மதியம் 3:40 மணிக்கு தங்கச்சிமடத்தில் ஏராளமான மீனவர்கள், பெண்கள் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் ராமேஸ்வரரத்தில் மதியம் 4:00 மணிக்கு புறப்படும் தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் ராமேஸ்வரம் ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டது. பின் 20 நிமிடம் தாமதமாக புறப்பட்ட ரயில் மதியம் 4:30 மணிக்கு தங்கச்சிமடத்தில் நிறுத்தப்பட்டது. பின் ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜுலு மீனவர்களிடம் சமரச பேச்சு நடத்தினர். இதுகுறித்து மத்திய, மாநில அரசிடம் வலியுறுத்துவதாக அதிகாரிகள் கூறியதும், மாலை 5:00 மணிக்கு மீனவர்கள் கலைந்து சென்றனர். மாலை 5:10 மணிக்கு ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் ஒரு மணி நேரம் ராமேஸ்வரம், தாம்பரம் ரயில் போக்குவரத்து பாதித்ததால், பயணிகள் அவதிப்பட்டனர். 500க்குமேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.