கடலில் மூழ்கிய விசைப்படகை மீட்பதில் மீனவர்களுக்கு சிரமம்
திருவாடானை: விசைப்படகில் பலகை உடைந்ததால் தண்ணீர் புகுந்து தொண்டி கடலில் மூழ்கிய நிலையில் மீனவர்கள் 4 பேர் காப்பற்றப்பட்டனர். பலத்த காற்று வீசுவதால் அப்படகை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி சோலியக்குடியை சேர்ந்தவர் விசாலாட்சி. இவருக்கு சொந்தமான விசைப்படகில் நம்புதாளை கருப்பையா 39, தளிர்மருங்கூர் தெற்குகுடியிருப்பு சேகர் 52, சோலியக்குடி லாஞ்சியடி ஞானசேகரன் 67, சம்பை சந்தியாகு 52, ஆகியோர் நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு மீன்பிடிக்க சென்றனர்.நீண்ட துாரம் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகின் அடிப்பகுதி பலகை உடைந்தது. இதில் கடல் நீர் புகுந்ததால் படகு மூழ்கத் துவங்கியது. தத்தளித்த மீனவர்களை அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்ற மீனவர்கள் சென்று காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். மூழ்கிய படகை மற்ற மீனவர்கள் சென்று மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பலத்த காற்று காரணமாக மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. நேற்று வலை மற்றும் உபகரணங்கள் மட்டும் மீட்கப்பட்டன. படகை மீட்கும் பணி இன்று நடக்க உள்ளது.