பரமக்குடியில் இரு முதியவர்களை கொலை செய்தவருக்கு குண்டாஸ்
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். பரமக்குடி எமனேஸ்வரம் பகுதி வளையனேந்தல் கிராமம் வைகை ஆற்றுப்படுகையில் வேலுச்சாமி, லட்சுமணன் ஆகிய முதியவர்கள் மது அருந்தியதை கண்டித்த தகராறில் நவ., 17ல் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இதில் வளையனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சீமைச்சாமி மகன் அலெக்ஸ்பாண்டி 26, நவ.,18ல் கைது செய்யப்பட்டு ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்ததால் எஸ்.பி., சந்தீஷ் பரிந்துரையில் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அலெக்ஸ்பாண்டி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.