| ADDED : டிச 25, 2025 05:23 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என தமிழ்வளர்ச்சித் துறை, தொழிலாளர் துறை அறிவுறுத்தியுள்ளது. ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தானில் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் வணிக நிறுவனங்கள் பெயர்ப்பலகைகளை தமிழில் வைக்க வலியுறுத்தி கூட்டம் நடந்தது. உதவி ஆணையர் (அமலாக்கம்) பாரி தலைமை வகித்தார். தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் சபீர்பானு முன்னிலை வகித்தார். ராமநாதபுரம், பரமக்குடி பகுதிகளைச் சேர்ந்த கடைகள், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் வணிகர் சங்க தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்றனர். மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் அனைத்திலும் பெயர்ப்பலகைகளை தமிழில் வைக்க வேண்டும். அதாவது பெயர்ப்பலகைளில் முதலில் தமிழில் 5 மடங்கிலும், ஆங்கிலத்தில் 3 மடங்கிலும், தேவையிருந்தால் பிற மொழியில் 2 மடங்கிலும் எழுத்துருக்கள் இருக்குமாறு பெயர்ப்பலகையை நிறுவ வேண்டும். இதை அனைத்து கடைகள், நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.