கடலாடி மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானம் தேவை
கடலாடி: கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரை வகுப்புகள் உள்ளன. 500க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட 15க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர். பள்ளி கட்டங்களுக்கு மத்தியில் விளையாட்டு திடல் உள்ளது. பல ஆண்டுகளாக கூடைப்பந்து மைதானத்தின் ஒரு பக்க கட்டுமானப் பகுதி இல்லாமல் சேதமடைந்துள்ளது. இதனால் கூடை பந்து விளையாட கூட வழியின்றி உள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் வாலிபால், டென்னிகாய்ட் மற்றும் கோகோ மைதானம் உள்ளிட்டவைகள் சேறும் சகதியுமாக உள்ளது. மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்கப்படுத்தும் வகையில் முறையாக விளையாட்டு திடல்களில் பராமரிப்பு பணிகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மாணவர்களின் பெற்றோர்கள் கூறியதாவது: கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டார 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மாணவர்கள் படிக்கின்றனர். மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு திடலை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.