கச்சத்தீவு பயணம் முன்னேற்பாடு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் கூட்ட அரங்கில் கச்சத்தீவு பயணம் செல்பவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்து கூறியதாவது:கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழா மார்ச் 14, 15ல் நடக்கிறது. இந்தியா மற்றும் இலங்கை அரசுகளின் வழிகாட்டுதலின் படி இரு நாட்டு மக்களும் பயணம் மேற்கொள்ள வேண்டும். அவர்களுக்கு தேவையான வசதிகளை இந்திய கடற்படை, கடலோர பாதுகாப்பு குழுமம், போலீசார், சுங்கா இலாகா, மீன்வளம் மற்றும் மீனவர், நலத்துறை, நகராட்சி உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் செய்து தர வேண்டும். மார்ச் 14ல் பயணம் செய்யவுள்ள பொதுமக்கள் அதிகாலை 5:00 மணிக்கு வந்து உடமைகளுடன் பரிசோதனைக்கு உட்படுத்தி பயணித்திடவும், மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, சுங்க இலாகா துணை கமாண்டன்ட் பிரகாஷ், ஐ.என்.எஸ்., பருந்து கமாண்டன்ட் ராகுல், வேர்க்கோடு சர்ச் நிர்வாகிகள், மீனவ அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.