பழைய ஊராட்சி கட்டடத்தால் ஆபத்து: அகற்ற வலியுறுத்தல்
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே கீரனுார் கிராமத்தில் சேதமடைந்துள்ள பழைய ஊராட்சி அலுவலக கட்டடத்தால் விபத்து அபாயம் உள்ளது. அதனை அகற்ற மக்கள் வலியுறுத்தினர்.கீரனூர் ஊராட்சி பழைய அலுவலகம் முறையாக மராமத்து பணி செய்யப்படாததால் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது. தற்போது புதிய கட்டடத்தில் ஊராட்சி அலுவலகம் செயல்படுகிறது. இந்நிலையில் பயன்பாடின்றி உள்ள பழைய ஊராட்சி அலுவலக கட்டடம் இடிக்கப்படாமல் இருப்பதால் சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது. இதன் அருகே அரசுப்பள்ளி செயல்பட்டு வருவதால் இவ்வழியே நடந்து செல்லும் மாணவர்கள், கிராம மக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே விபத்திற்கு முன்னதாக பழைய ஊராட்சி அலுவலக கட்டடத்தை அகற்ற ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.