ராமநாதபுரத்தில் சமரச விழிப்புணர்வு குறித்து ஊர்வலம்: நீதிபதிகள் பங்கேற்பு
ராமநாதபுரம்: -ராமநாதபுரத்தில் சமரச விழிப்புணர்வு குறித்து ஊர்வலம் நடந்தது. இதில் மக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி நீதிபதிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சமரச தீர்வு மையம் சார்பில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க சிறப்பு சமரச தீர்வு முகாம் ஜூலை 1 முதல் செப்., 30 வரை நடை பெற்று வருகின்றன. இதனை முன்னிட்டு சிறப்பு விழிப்புணர்வு ஊர்வலம் ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட முதன்மை நீதிபதி மெஹபூப் அலிகான் துவக்கி வைத்தார். மேலும் பொதுமக்களிடம் சமரச தீர்வு மையம் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி மோகன்ராம், மகிளா நீதிமன்ற நீதிபதி கவிதா, தலைமை குற்றவியல் நடுவர் ஜெயசுதாகர், ஒருங்கிணைப்பாளர் சார்பு நீதிபதி பாஸ்கர், சார்பு நீதிபதி மும்தாஜ். குற்றவியல் நடுவர் எண் 1 மாஜிஸ்திரேட் நிலவேஸ்வரன், மாவட்ட உரிமையியல் நீதிபதி கேத்தரின் ஜெபசகுந்தலா, வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் அன்புச்செழியன், செயலாளர் முத்து துரைசாமி, மத்தியஸ்தர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற அலுவலர்கள், பொதுமக்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குகளை விரைந்து முடிக்க சிறப்பு சமரச தீர்வு முகாம் ஜூலை 1 முதல் செப்., 30 வரை நடக்கிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து தீர்வு காண சமரச தீர்வு மையம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.