மழை பெய்யாததால் வீணாகும் விதைகள்
திருவாடானை : மழையின்றி வயலில் விதைகள் முளைப்பு தன்மையை இழந்து வருவதால் திருவாடானை தாலுகாவில் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக திகழும் திருவாடானை தாலுகாவில் 26 ஆயிரத்து 650 எக்டேரில் நெல் சாகுபடி பணிகள் துவங்கியுள்ளது. உழவு பணிகள் முடிந்து விதைத்துள்ளனர். மழை பெய்யாததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இது குறித்து செங்கமடை விவசாயி சுந்தரபாண்டியன் கூறியதாவது- கடந்தாண்டு விதைக்கும் போது போதிய மழை இன்றி நெல் விதைகள் பாதிக்கபட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் விதைத்தோம். இந்தாண்டு விதைத்து 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. மழை பெய்யாமல் விதைகள் முளைக்கவில்லை. மழை பெய்ய வேண்டிய நேரத்தில் வெயில் வாட்டி வதைக்கிறது. காற்றும் பலமாக வீசுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் மழை பெய்யவில்லை என்றால் விதைகள் முளைப்பு தன்மையை இழந்துவிடும். மீண்டும் விதை நெல் வாங்கி விதைப்பதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்றார்.