ராமநாதபுரத்தில் ரூ.18,521 கோடி கடன் வழங்க இலக்கு
ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு நிதி ஆண்டில் ரூ.18 ஆயிரத்து 521 கோடி கடனாக வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட முன்னோடி வங்கியின் நடப்பு நிதியாண்டிற்கான வங்கிக்கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்வு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. இதில் திட்ட அறிக்கை கையேட்டை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெளியிட ரிசர்வ் வங்கியின் துணை பொது மேலாளர் அன்பரசு பெற்றுக் கொண்டார். நடப்பு நிதி ஆண்டில் ரூ.18 ஆயிரத்து 521 கோடி கடனாக வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதில் வேளாண் துறைக்கு ரூ. 13 ஆயிரத்து 30 கோடியும், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1006.95 கோடியும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. வீட்டுக்கடன் ரூ.37.32 கோடி, கல்விக்கடன் ரூ.20.68 கோடி, சமூக உள்கட்டமைப்புக்கு ரூ.23 லட்சம், இதர கடன்களுக்கு ரூ.65.4 கோடியும், முன்னுரிமை அல்லாத கடன் ரூ.4354 கோடி வழங்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.11,850 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் ரூ.15,585 கோடி கடன் வழங்கப் பட்டுள்ளது. மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் அருண்குமார், ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் அன்பரசு, ஐ.ஒ.பி., முதுநிலை மண்டல மேலாளர் லஷ்மி நரசிம்ஹன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.