இலங்கை போலீஸ்காரர் வழக்கு மூவரின் சாட்சியங்கள் பதிவு
ராமநாதபுரம்:-போதைப்பொருள் திருடி தப்பி வந்து தனுஷ்கோடியில் கைதான இலங்கை போலீஸ்காரர் மீதான வழக்கில் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் மூன்று பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. இலங்கை கொழும்பு புறநகர் சபுகஸ்கந்த பகுதியில் மரக்கடையில் இருந்து 2020- ஆக.,26-ல் போலீசார், 23 கிலோ ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கைதான மரக்கடை உரிமையாளர் அளித்த தகவலில் அனுர குமார என்பவரை பிடித்தனர். இவர் இலங்கை துறைமுகம் ஸ்டேஷன் போலீஸ்காரர் பிரதீப் குமார் பண்டாராவின் 32, அண்ணன் ஆவார். பிரதீப் குமார் பண்டாரா தான் அந்த ஸ்டேஷனில் போலீசார் பறிமுதல் செய்து வைத்திருந்த போதைப்பொருளை பணி நேரத்தில் திருடி சகோதரரிடம் கொடுத்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதனால் அவரை வழக்கில் சேர்த்து விசாரிக்க முடிவு செய்தனர். இது பற்றி அறிந்த அவர் பைபர் படகில் தமிழகம் தப்பிவந்தார். 2020 ல்செப்., 4 ல் மண்டபம் கடலோர காவல் படை போலீசார் அவரை கைது செய்து சென்னை பூந்தமல்லி சிறையில் அடைத்தனர். சாட்சிகளிடம் விசாரணை
இது தற்போது சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடக்கிறது. பிரதீப் குமார் பண்டாரா ஜாமின் பெற்று திருச்சி முகாமிற்கு மாற்றப்பட்டார். இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதிமெகபூப் அலிகான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இலங்கை போலீஸ்காரர் நேரில் ஆஜரானார்.வழக்கில் மண்டபம் மரைன் போலீஸ்காரர் குமார், வி.ஏ.ஓ., செல்வம், மண்டபம் கேம்ப்பில் உள்ள மொழி பெயர்ப்பாளர் மதிவதனன் ஆகியோரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜரானார். வழக்கைஜூன் 17 க்கு நீதிபதி தள்ளி வைத்து உத்தரவிட்டார்.