பள்ளிகளில் மகிழ்முற்றம் குழு அமைக்கும் பணிகள் ஜரூர்
திருவாடானை : திருவாடானை பள்ளிகளில் மகிழ்முற்றம் குழு அமைக்கும் பணிகள் நடக்கிறது.அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களிடையே தலைமை பண்பை வளர்க்கும் வகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் பெயர்களில் மாணவர் மகிழ்முற்றம் குழுக்கள் உருவாக்க கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கற்றல் திறன் மேம்பாடு, மாணவர்களின் பங்களிப்பை அதிகரிக்க விடுப்பு எடுப்பதை குறைக்க, ஒற்றுமை கல்வியை ஊக்குவித்தல், ஆசிரியர்-மாணவர் உறவை மேம்படுத்துவதே இதன் நோக்கம். பள்ளித் தலைமையாசிரியர் மாணவர் குழு அமைப்பை வழி நடத்த வேண்டும். இக்குழுவில் பள்ளி மாணவர்கள் இருவர் குழு தலைவராக இருக்க வேண்டும்.ஒவ்வொரு வகுப்பு பிரிவிலும் குலுக்கல் முறையில் வகுப்பு தலைவரை தேர்வு செய்ய வேண்டும். மகிழ்முற்றம் மாணவர் குழு அமைப்பின் செயல்பாடுகளை தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் கருத்துக்களை ஆலோசனை நடத்தி செயல்படுத்த உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். திருவாடானை ஒன்றியத்தில் 79 அரசு தொடக்கப்பள்ளிகள், 19 நடுநிலைப் பள்ளிகள், 14 அரசு உதவி பெறும் பள்ளிகள் என 112 பள்ளிகள் உள்ளன. அனைத்து பள்ளிகளிலும் மகிழ்முற்றம் குழுக்கள் அமைக்கும் பணிகள் நடக்கிறது. இதில் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் நவ.14 குழந்தைகள் தினத்தில் பதவி ஏற்க உள்ளனர் என ஆசிரியர்கள் கூறினர்.