மான் பெயரில் தமிழ்நாடு முழுவதும் ஊர்கள்: வரலாற்று ஆய்வில் தகவல்
ராமநாதபுரம்; மான் எனும் பொதுப்பெயரிலும், இலக்கியங்கள் குறிப்பிடும் பெயரிலும் தமிமிழகத்தில் பரவலாக மான் என்ற பொதுப்பெயரில் 161, சிறப்பு பெயரில் 80 என 241 ஊர்கள் உள்ளதை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர் பால்கரை வே.சிவரஞ்சனி கண்டறிந்துள்ளார். இதுபற்றி சிவரஞ்சனி கூறியதாவது: மான் எனும் பொதுப்பெயரில் மானுார், மானுப்பட்டி, மான்கானுார், மான்கரட்டுப்பாளையம், மாங்குளம், மாஞ்சேரி, மாங்காடு, மான்குண்டு போன்ற 100க்கும் மேற்பட்ட ஊர்கள் உள்ளன. மான் இனத்தின் பெயரிலும் உள்ளன. தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் மானின் கொம்புகளைக் கொண்டு அவற்றை இரலை, கலை என இரு இனமாகப் பகுப்பர். இரலை இனத்தில், இரலை, நவ்வி, மரையான், கலை இனத்தில் உழை, கடமான் ஆகிய வகைகள் உள்ளன. இதன் பெயர்களில் தமிழ்நாடெங்கும் ஊர்கள் உள்ளன. கொம்புடன், கருமையான உடல் கொண்ட இரலையின் ஆண் மானை தேவாரம் 'கருமான்' என்கிறது. இப்பெயரில் கார்மாங்குடி, கருமங்காடு, கருமாங்குளம், கருமாபாளையம், கருமஞ்சிறை, கருமாபுரம், கருமாந்துறை, கருமனுார் போன்ற பல ஊர்கள் உள்ளன. முறுக்கிய கொம்புகளால் இதை முறுக்குமான் எனவும், புல்வெளிகளில் வாழ்வதால் புல்வாய் எனவும் அழைத்தனர். முறுக்கோடை, முருக்கம்பட்டு, முருக்கம்பாடி, முருக்கன்குட்டை, முருக்கன்பாறை, புல்வாய்க்குளம், புல்வாய்க்கரை, புல்வாய்பட்டி போன்ற பெயர்களில் ஊர்கள் உள்ளன. பசுவைப் போல் இருப்பதால் மரையான் எனப்படும் மான் பெயரில் மரைக்குளம், மரையூர், மறைநாடு போன்ற ஊர்கள் உள்ளன. கலைமான், புள்ளிமான் பெயர்களில், கலைக்குறிச்சிவயல், கலைகுடிபட்டி, கலையன்விளாகம், கலையனுார், கலையூர், கலைக்குளம், உழையூர், உழக்குடி, புள்ளிமான் கோம்பை, புலிமான்குளம் என ஊர்கள் உள்ளன. கடமான் பெயரில் கடமான்குளம், கடமாகுட்டை, கடமனுார், கடமான் கொல்லை, கடமாங்குடி, கடமஞ்சேரி, கடத்திக்குட்டை போன்ற பல ஊர்கள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் மான் இனங்களின் பெயரில் தமிழகம் முழுவதும் ஊர்கள் அமைந்திருப்பது தமிழர் பண்பாட்டின் தொடர்ச்சிக்குச் சான்றாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.