ராமநாதபுரத்தில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி
ராமநாதபுரம் : -ராமநாதபுரம் நகருக்குள் அதிகமான வாகன போக்குவரத்து இருப்பதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர். அவசரத்திற்கு ஆம்புலன்ஸ்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. ராமநாதபுரத்தில் இருந்து மதுரை செல்லும் ரோட்டில் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, சாலைத் தெரு சந்திப்பு, ரோமன் சர்ச் வரை வாகன நெரிசல் தொடர்கிறது. ராமநாதபுரம் நகருக்குள் பெரும்பாலான இடங்களில் வாகனங்களை ரோடுகளில் நிறுத்தி செல்கின்றனர்.இதனால் வாகனங்கள் செல்ல வேண்டிய ரோடுகளை இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் ஆக்கிரமித்து விடுகின்றன. மக்கள் போக்குவரத்திற்காக இயக்கப்படும் வாகனங்கள் நிறுத்தங்களில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றும் போது போதுமான இட வசதியின்றி வாகனங்கள் நெரிசலில் சிக்குவதால் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.நகரில் வாகனங்களின் பெருக்கத்திற்கு ஏற்ப ரோடு விரிவாக்கம் இல்லாமல் குறுகிவிட்டது. இதனால் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி, ரோட்டில் நிறுத்தப்படும் வாகனங்களை முறைப்படுத்தி ஒழுங்குபடுத்தினால் போக்குவரத்து சீரமைக்க முடியும்.போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.